🗡️

வரங் கேட்டல் - பாரதி

Bharathiyar asks a wish from shiva

தோத்திரப் பாடல்கள் - யோக சித்தி

\
தேடிச் சோறுநிதந் தின்று -- பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம்

வாடித் துன்பமிக உழன்று -- பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து -- நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல

வேடிக்கை மனிதரைப் போலே -- நான்

வீழ்வே னன்றுநினைத் தாயோ?

\
\
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை

நேரே இன்றெனக்குத் தருவாய் -- என்றன்

முன்னைத் தீயவினைப் பயன்கள் -- இன்னும்

மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி

என்னைப் புதிய வுயிராக்கி-எனக்

கேதுங் கவலையறச் செய்து -- மதி

தன்னை மிகத்தெளிவு செய்து -- என்றும்

சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்


    - பாரதி